Saturday, May 4, 2024
Home » ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் போலீஸ் சம்மன்: உதவியாளருடன் மே 2ம் தேதி ஆஜராக உத்தரவு

ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் போலீஸ் சம்மன்: உதவியாளருடன் மே 2ம் தேதி ஆஜராக உத்தரவு

by Karthik Yash

சென்னை: நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில், சம்மன் அனுப்பப்பட்டு நயினார் நாகேந்திரன் ஆஜராகாத நிலையில், வரும் மே 2ம் தேதி உதவியாளர் மணிகண்டனுடன் தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு கடந்த 6ம் தேதி இரவு சென்ற ரயிலில் நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தேர்தல் செலவிற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அவரது ஓட்டலில் வேலை செய்யும் சதீஷ் (33), அவரது தம்பி நவீன் (31), பெருமாள் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் ஆசைதம்பி, முருகன், பாஜ மாநில தொழில்துறை பிரிவின் தலைவர் கோவர்தனன், ஜெய்சங்கர் ஆகியோரும் பணத்தை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு வந்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 8 பேரும் தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. இந்த வழக்கில் நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 22ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அவர் 10 நாள் அவகாசம் கோரி கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் ஆசைதம்பி, ஜெய்சங்கர், முருகன் ஆகியோர் நேற்று முன்தினம் தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து மே 2ம் தேதி நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டன் ஆகிய இருவரும் தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என 2வது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எனவே மே 2ம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி அவர் தரப்பு பதிலை எழுத்துப்பூர்வமாக அளிப்பார் என தெரிகிறது.

You may also like

Leave a Comment

19 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi