புதுடெல்லி: ரயிலில் முதியோருக்கான கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ரயிலில் முதியோர்கள் பயணிப்பதை கட்டுப்படுத்த அவர்களுக்கான சலுகையை ஒன்றிய அரசு ரத்து செய்தது. இந்த சலுகையை மீண்டும் வழங்கக் கோரி நாடாளுமன்ற நிலைக்குழு சமீபத்தில் பரிந்துரைத்தும், ஒன்றிய அரசு செயல்படுத்தவில்லை. இந்நிலையில், முதியோருக்கான ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரி எம்.கே.பாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் அசானுதீன் அமானுல்லா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘இது அரசின் கொள்கை சார்ந்த முடிவு. இதில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பது பொருத்தமாக இருக்காது. மூத்த குடிமக்களின் நலன் மற்றும் நிதி விளைவுகளை மனதில் வைத்து இந்த விஷயத்தில் அரசு முடிவெடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.