அண்ணா நகர்: சென்னை போக்குவரத்து காவல் துறை, ரேடியோ சிட்டி எப்.எம் மற்றும் சரிகம இசை குழுவினருடன் இணைந்து உருவாக்கிய 12 மணி நேர போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் பாடல் உள்ளடக்கிய “இசை சிக்னல்’’ தொகுப்பை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அண்ணாநகர், ரவுண்டானா அருகே நேற்று சிக்னலில் துவக்கி வைத்தார். முதற்கட்டமாக சென்னையில் 105 சிக்னல்களில் இதை அமல்படுத்தி உள்ளனர். 40 போக்குவரத்து விழிப்புணர்வு குறுந்தகவல்கள், மற்றும் பாடல்கள் அடங்கிய பென்டிரைவ்களை உதவி ஆய்வாளர்களுக்கு காவல் ஆணையர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசியதாவது: போக்குவரத்து விழிப்புணர்வு இசைக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். ஒரே பாடல் மீண்டும் மீண்டும் ஒலிப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆகவே 12 மணி நேரமும் இடம்பெற்ற பாடல்கள் மீண்டும் ஒலிக்காத வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டது.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் கபில் சரத்கர், துணை ஆணையர் ஷர்சிங் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.