திருமலை: பாரில் மது குடித்தபோது பொம்மை துப்பாக்கி என நண்பர்கள் கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த ரயில்வே போலீஸ்காரர், தரையில் சுட்டார். அவரை கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜூனா (40). ராணுவத்தில் இருந்து 2021ல் ஓய்வு பெற்றார். பணியில் இருந்தபோது உரிமத்துடன் கூடிய கைத்துப்பாக்கி வாங்கி வைத்துள்ளார். தற்போது ரயில்வே பாதுகாப்பு படையில் ஒப்பந்த போலீஸ்காரராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சித்தூரில் உள்ள பாரில் நண்பர்களுடன் மது அருந்தினார். அனைவரும் போதையில் இருந்தபோது மல்லிகார்ஜூனாவிடம் இருப்பது பொம்மை துப்பாக்கி என்று கூறி நண்பர்கள் கேலி, கிண்டல் செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மல்லிகார்ஜுனா ‘என்னிடம் உள்ளது பொம்மை துப்பாக்கி இல்லை’ என்று ஆவேசத்துடன் கூறியபடி தரையை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டார். இதனால் பாரில் இருந்தவர்கள் அனைவரும் பயந்து வெளியே ஓடினர். இதனையடுத்து மல்லிகார்ஜூனாவும் அங்கிருந்து சென்றுவிட்டார்.இதுகுறித்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சித்தூர் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பாரில் துப்பாக்கி தோட்டா பட்டதில் சேதம் அடைந்த இடத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மல்லிகார்ஜுனாவை நேற்று கைது செய்தனர்.