ஏற்காடு: ஏற்காடு மலைப்பாதையில், சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில், பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு நேற்று வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 16 பேர், சுற்றுலா வந்தனர். ஏற்காட்டிற்கு வந்த பின் படகு இல்லம், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்த அவர்கள், நேற்று இரவு ஊர் திரும்பினர்.
அப்போது மலைப்பாதை 6வது கொண்டை ஊசி வளைவில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் அஜய் அரவிந்த் (28), மற்றும் பெண்கள், குழந்தைகள் என 16 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 6 பேர் சிறு காயங்களுடன், ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.