புதுடெல்லி: நாட்டில் அதிக எண்ணிக்கையிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருந்தும், அதற்கான கோரிக்கை வைத்தும் ஒன்றிய அரசு போதிய நிதியை ஒதுக்கீடு செய்யாதது ஏன் என்று மாநிலங்களவையில் திமுக எம்பி கிரிராஜன் கேட்டிருந்தார். இதையத்து அதற்கு ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்த பதிலில்,‘‘சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்கு புத்துயிர் அளிக்க தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதேப்போன்று நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவித்தார்.
எம்பி ராஜேஷ்குமார்: மாற்றுப் பொருட்களின் இறக்குமதியால் தீப்பெட்டித் தொழில் உட்பட உள்நாட்டு பாரம்பரியப் பொருட்கள் பல பாதிக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று லைட்டர்களை இறக்குமதி செய்வதாலும் அத்தொழில் பாதிப்படைந்து வருகிறது. உள்நாட்டு பாரம்பரிய தயாரிப்புகளை பாதிக்கும் இதேப்போன்ற இறக்குமதி பொருட்களை அரசாங்கம் மதிப்பீடு செய்கிறதா என திமுக எம்பி ராஜேஷ்குமார் கேட்டிருந்தார். இதையடுத்து அதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் அனுப்பிரியா படேல்,லைட்டர்களால் பாரம்பரிய தீப்பெட்டி தொழில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் உள்நாட்டு பாரம்பரிய தயாரிப்புகளில் மாற்றுப் பொருட்களின் இறக்குமதியின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கான ஒரு குறிப்பிட்ட ஆய்வு வர்த்தகத் துறையால் செய்யப்படவில்லை என தெரிவித்தார்.
நாட்டில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களைப் பாதுகாப்பானதாகவும், தொழிலாளர்களை பாதுகாக்கவும், அதிக மழை, வெள்ளம் மற்றும் நில சரிவுகள் காரணமாக நிலக்கரி சுரங்கங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவதை தடுத்து சமாளிக்கவும் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று மக்களவையில் திமுக எம்பி கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து அதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘‘பாதுகாப்பு மேலாண்மைத் திட்டங்களை தயாரித்தல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றை ஒன்றிய அரசு செய்து வருகிறது என தெரிவித்தார்.