சென்னை: காஞ்சிபுரம் நகதீஸ்வரர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் துரை மாணிக்கம். இவர் தனது மனைவி கலைச்செல்வி, மகன்கள் மோகன்ராஜ், நவீன் (23) மற்றும் உறவினர்கள் சுமார் 17 பேர் நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தனர். இதில் கலைச்செல்வி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நவீன், ஐடி ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் சேரன்மகாதேவி, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றுவிட்டு, முக்கூடல் தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க வந்தனர். தொடர்ந்து அனைவரும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இதில் நவீன் ஆழமான பகுதியில் குளித்தபோது திடீரென நீரில் மூழ்கினார். இதைப் பார்த்து அருகே குளித்து கொண்டிருந்த அவரது அண்ணன் மோகன்ராஜ் பதறியபடி நவீனை காப்பாற்ற முயன்றார். ஆனால், அதற்குள் நவீன் தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நவீனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை. தேடுதல் பணியை நேற்று காலை மீண்டும் தொடங்கினர். சில மணி நேரத்தில் நவீனை சடலமாக மீட்டனர். உடலை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.