சென்னை: பெரிய வெங்காயம் கிலோ ரூ.25 விற்க நடவடிக்கை எடுத்து இருப்பதாக அறிவித்திருக்கும் ஒன்றிய அரசு வெங்காய கையிருப்பை 3 லட்சம் டன்னில் இருந்து 5 லட்சம் டன்னாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. கடந்த சில வாரங்களாக மக்களை விழிபிதுங்க வைக்க தக்காளியின் விலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெரிய வெங்காயத்தின் விலை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 19% அதிகரித்துள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களில் கடந்த ஆண்டு இதே தேதியில் ரூ.25 விற்கப்பட்ட பெரிய வெங்காயம் இந்த ஆண்டு ரூ.37-க்கு விற்பனையாகிறது.
இதையடுத்து வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் கையிருப்பை 2,51,000 டன்னில் இருந்து 5 லட்சம் டன்னாக ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. 1 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து பாதுகாக்குமாறு இந்திய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தும் அமைப்பிற்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதேபோல இன்று முதல் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.25-க்கு வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யவும் தொடர்புடைய வேளாண் விற்பனை அமைப்புகளை ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.