சென்னை: வார இறுதி நாட்களான இன்று. நாளை மற்றும் சுதந்திர தினமான ஆக.15-ல் விடுமுறை என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தொடர் விடுமுறை காரணமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வார இறுதி நாட்களில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கி வேலை மற்றும் கல்வி பெற்று வரும் நபர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகளில் அதிக அளவில் மக்கள் செல்வார்கள்.
இந்த சூழலில் வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தின விடுமுறை என தொடர் விடுமுறை என்பதால் நான்கு நாட்கள் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர். சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதலாக 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மற்ற நாட்களை விட பல மடங்கு ஆம்னி பேரூந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. நேற்று சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகள் உடன் கூடுதலாக 543 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மொத்தம் 2,643 பேருந்துகளில் 1,32,150 பயணிகள் பயணம் செய்துள்ளனர். கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் ஆகிய முக்கிய இடங்களுக்கும் இன்று 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கு 400 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,100 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.