மதுரை: சென்னையைச் சேர்ந்த கலைவாணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தமிழ் வழி ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்டு உதவி ஆட்சியர் பணியில் சேர்ந்தேன். தமிழ் வழி ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் ஐகோர்ட் கிளையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கையளித்தனர். அதில், 34 பேர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முறைகேடாக தமிழ்வழி சான்று பெற்றதாக கூறியிருந்தனர். இந்த அறிக்கை அடிப்படையில், எனக்கு டிஎன்பிஎஸ்சி தரப்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் நடந்த குளறுபடிக்கு நான் பொறுப்பாக முடியாது. சான்றிதழ்களை முறையாக சரிபார்க்கவில்லை. எனவே, டிஎன்பிஎஸ்சி தரப்பில் எனக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து ெசய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, மனுவிற்கு டிஎன்பிஎஸ்சி செயலர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப். 21க்கு தள்ளி வைத்தனர்.