சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில், உரிய மதிப்பெண்கள் பெற்றும் தேர்வு செய்யப்படாததை எதிர்த்து திருப்பூரைச் சேர்ந்த சாய்புல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பளித்ததால், அதை எதிர்த்து அரசு பணியாளர் தேர்வாணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தவர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர் என்று தேர்வாணையம் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இதையடுத்து, தேர்வாணைய செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ் பாபு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை தந்ததற்காக தேர்வாணைய இணைச் செயலாளர் பிரான்சிஸ் மரிய புவி, துணைச் செயலாளர் ஏ.வி.ஞானமூர்த்தி, சார்புச் செயலாளர்கள் ஜி.சிவகுமார், கே.பாஸ்கர பாண்டியன் ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு அது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. பிரச்னையை சரி செய்வது என்பது குறித்து குழு அமைத்து விசாரிக்கப்படும். தேர்வாணைய குளறுபடிகளை தீர்ப்பதற்காக தேர்வாணைய விசாரணை அதிகாரிகள் குழுவை ஏற்படுத்தி விசாரிக்கப்படும். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.