Thursday, May 9, 2024
Home » திருவண்ணாமலையில் தெப்பல் உற்சவம் நடைபெறும் ஐயங்குளத்தை சீரமைத்து அழகுபடுத்தும் பணி

திருவண்ணாமலையில் தெப்பல் உற்சவம் நடைபெறும் ஐயங்குளத்தை சீரமைத்து அழகுபடுத்தும் பணி

by Lakshmipathi

*அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா தெப்பல் உற்சவம் நடைபெறும் ஐயங்குளத்தை தூர்வாரி சீரமைத்து அழகுபடுத்தும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா நிறைவாக தெப்பல் உற்சவம் நடைபெறும் ஐயங்குளத்தை, தூர்வாரி சீரமைத்து அழகுபடுத்தும் பணி தூய்மை அருணை சார்பில் நடந்து வருகிறது.

ஆன்மிக சிறப்பு மிக்க ஐயங்குளம் 3 ஏக்கர் பரப்பளவில் 360 அடி நீளம் மற்றும் 360 அடி அகலத்தில் சதுர வடிவில் மிக நேர்த்தியான கட்டமைப்புடன் இக்குளம் அமைந்திருக்கிறது. ஐயங்குளத்தில் ஏற்கனவே பாசிபடித்து கிடந்த தண்ணீர் முழுவதும் அகற்றப்பட்டு, சேறும், சகதியும் முற்றிலுமாக தூர்வாரி அகற்றப்பட்டது. மேலும், குளத்தின் நான்கு திசைகளிலும் உள்ள படிக்கற்கள் சீரமைக்கப்பட்டன. குளத்தில் மையப்பகுதியில் அமைந்துள்ள மண்படத்தில் புதியதாக நந்தி சிலை நிறுவப்படுகிறது.

இந்நிலையில், ஐயங்குளத்தை சீரமைக்கும் பணியை நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். அப்போது, படிகளை முழுமையாக சீரமைக்க வேண்டும். குளத்தை சுற்றிலும உள்ள மண் மற்றும் கழிவுகளை அகற்ற வேண்டும், நான்கு திசைகளிலும் நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.

பக்தர்கள் பாதுகாப்பாக நீராடி செல்லும் வகையில், தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என்றார். அதோடு, குளத்தின் நான்கு திசைகளிலும் உள்ள தடுப்பு சுவர்களில் திருப்பவை மற்றும் திருக்குறள் ஆகியவற்றை எழுத வேண்டும் என தெரிவித்தார்.ஆய்வின்போது, கலெக்டர் பா.முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன், மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், டிஆர்ஓ பிரியதர்ஷினி, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், துரை.வெங்கட், மாவட்ட பிரதிநிதி குட்டி புகழேந்தி மற்றும் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

10 + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi