Wednesday, May 8, 2024
Home » திருவண்ணாமலை மாவட்டம் முதியோர் உதவித்தொகை பெறுவதில் தமிழகத்தில் முதலிடம்-நலத்திட்ட உதவிகள் வழங்கி கலெக்டர் பேச்சு

திருவண்ணாமலை மாவட்டம் முதியோர் உதவித்தொகை பெறுவதில் தமிழகத்தில் முதலிடம்-நலத்திட்ட உதவிகள் வழங்கி கலெக்டர் பேச்சு

by Lakshmipathi

தண்டராம்பட்டு : தண்டராம்பட்டு அருகே நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டம் முதியோர் உதவித்தொகை பெறுவதில் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்தில் 3வது நாளான ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். எம்பி சி.என்.அண்ணாதுரை, செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் அப்துல் ரகூப் வரவேற்றார். இதில் தண்டராம்பட்டு, தானிப்பாடி, வாணாபுரம் ஆகிய உள்வட்டங்களை சார்ந்த 63 கிராமங்களில் இருந்து 1,133 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது விசாரணை செய்து 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கலெக்டர் பேசியதாவது:

தமிழகத்திலேயே முதியோர் உதவித்தொகை பெறுவதில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 12 தாலுகாக்களில் மாவட்ட அலுவலர்களை நியமித்து பொது மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை விசாரணை செய்து விரைந்து தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். மனுக்கள் அளிக்கப்பட்ட 15 நாட்களுக்குள்ளாக விசாரணை செய்து நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். அனைத்து அலுவலர்களும் பொதுமக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பணியாற்ற வேண்டும். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகி உள்ளதால் இவ்வளவு நாட்கள் ஜமாபந்தி நடைபெறவில்லை. இந்தாண்டு ஜமாபந்தி நடைபெறுவதால் பொதுமக்கள் அளிக்க கடிய மனுக்களை விசாரணை செய்து நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

அப்போது பயிற்சி கலெக்டர் ஸ்ருதி ராணி, துணை தாசில்தார் விஜயகுமார், ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட ஆதிதிராவிட நல குழு உறுப்பினர் வேலு, தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் தனக்கோட்டி, பாஸ்கரன், முத்துலட்சுமி, திவ்யபாரதி, மணி, ஆர்ஐக்கள், விஏஓக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போளூர்: சந்தவாசல் உள்வட்டத்திற்கான சந்தவாசல், குப்பம், கல்குப்பம், அனந்தபுரம், சேதாரம்பட்டு, படவேடு, வாழியூர், காளசமூத்திரம், இலுப்பகுணம், நாராயணமங்கலம், வெள்ளூர், கல்பட்டு, இரும்பிலி உட்பட 19 கிராமங்களுக்கான 3வது நாள் ஜமாபந்தி தொடங்கியது. கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) வெற்றிவேல் தலைமை தாங்கினார்.

தாசில்தார் சஜேஷ்பாபு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணை தாசில்தார் தட்சணாமூர்த்தி வரவேற்றார். இதில் 267 பேர் மனுக்களை கொடுத்தனர். இதில் ஆதிதிராவிட நல தாசில்தார் வைதேகி, மண்டல துணை தாசில்தார் சுசிலா, தலைமை நில அளவர் சரவணன், வட்ட வழங்கல் அலுவலர் விசுவநாதன், ஆர்ஐக்கள் வரதராஜன், சுரேஷ், விஏஓக்கள் ரேணு, சம்பத், மயிலரசன், செந்தில்குமார், வைதீஸ்வரி, மகாலிங்கம், ஜெயக்குமார், நித்தியானந்தம் உள்பட கலந்து கொண்டனர்.

அதேபோல், சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் 3வது நாள் ஜமாபந்தி விழாவில் கொழப்பலூர் பொதுமக்களிடம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழங்குடியினர் நல அலுவலர் செந்தில்குமார் மனுக்களை பெற்றார். அப்போது தாசில்தார்கள் சசிகலா, கோவிந்தராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

ten + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi