Sunday, September 1, 2024
Home » திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி கிருத்திகை விழா கோலாகலம்: காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி கிருத்திகை விழா கோலாகலம்: காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

by Karthik Yash

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாசி கிருத்திகை விழா கோலாகலமாக நடந்தது. இதில், அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயில் முருகன் தலங்களில் புகழ் பெற்றதாகும். இக்கோயிலில் நேற்று மாசி கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கார், வேன், மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்துகளில் குவிந்தனர்.

இதுமட்டுமின்றி, சென்னையில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பாதயாத்திரையாக காவடி எடுத்தபடி, திருப்போரூர் கோயிலுக்கு வந்தனர். முருகன் கோயிலை ஒட்டியுள்ள சரவணப்பொய்கையில் நீராடி மொட்டை அடித்து வேல் தரித்து பால் காவடி, புஷ்ப காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி எடுத்தும் பஜனை பாடல்களை பாடியும் நான்கு மாடவீதிகளிலும் உலா வந்தனர். இதேபோல் வடபழனி, வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்வேறு பக்த ஜனசபை குழுவினர் ராட்சத விளக்குகளை பொருத்தி, முருகன் சிலைகளை அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். இவர்களுடன் ஆயிரக்கணக்கானோர் நான்கு மாடவீதிகளிலும் வேல் குத்தி ஊர்வலம் சென்றனர்.

தற்போது, மாசி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருவதால் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில், கோயில் நிர்வாகம் தரப்பில் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பல்வேறு அமைப்புகளின் சார்பில் நான்கு மாடவீதிகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி ரவி அபிராம், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், சரவணன், எஸ்ஐக்கள் பன்னீர்செல்வம், கோதண்டம், கருணாநிதி உள்ளிட்டோர் தலைமையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், பெண் பக்தர்களுக்கு அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின்களை பாதுகாக்கும் வகையில், போலீஸ் தரப்பில் பாதுகாப்பு வளையம் தரப்பட்டது. இதனிடையே, மாசி பிரம்மோற்சவத்தின் 2ம் நாளான நேற்று காலை தொட்டி உற்சவம் வீதிஉலா நடைபெற்றது. இரவு பூத வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வீதியுலா வந்து காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

You may also like

Leave a Comment

two × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi