*நடிகர் வடிவேல் படத்துடன் எச்சரிக்கை போர்டு வைத்த கவுன்சிலர்
திருப்பத்தூர் : திருப்பத்தூர் நகராட்சியில் ‘குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்’ என நடிகர் வடிவேலு படத்துடன் வார்டு கவுன்சிலர் எச்சரிக்கை போர்டு வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன இதில் 4வது வார்டு கவுன்சிலராக கவுரி ஐயப்பன் உள்ளார்.
இந்த நிலையில் 4வது வார்டில் உள்ள ஓங்காளியம்மன் கோயில் தெரு மற்றும் அய்யம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலையோரம் குப்பைகளை கொட்டி விட்டு செல்கின்றனர் இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு நோய் பரவும் நிலை உள்ளது. இதுகுறித்து அந்த வார்டு கவுன்சிலர் கவுரி ஐயப்பன் பலமுறை பொதுமக்களிடம் இந்த பகுதியில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் இரவு நேரங்களில் பலர் குப்பைகளை கொட்டி வருவதால் துர்நாற்றம் வீசி வருகிறது.
இதற்காக கவுன்சிலர் அனைவரையும் கவரும் விதத்தில் ஒரு எச்சரிக்கை போர்டு வைத்துள்ளார். அதில், திருப்பத்தூர் நகராட்சி, இந்த இடத்தில குப்பை கொட்ட நீயும் வரக் கூடாது. நானும் வரமாட்டேன். இப்படிக்கு திருப்பத்தூர் 4வது வார்டு என எழுதப்பட்டுள்ளது. அதோடு பொதுமக்களுக்கு சுத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதில் நடிகர் வடிவேல் புகைப்படத்தையும் வைத்துள்ளனர். இது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.