திருவனந்தபுரம்: திருப்பதி ஏழுமலையான் கோயிலைப் போல சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்காக கழிப்பறை, ஓய்வறை சிற்றுண்டி வசதியுடன் வரிசை வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது சராசரியாக தினமும் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலை வருகின்றனர். இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
வனப்பகுதி என்பதால் திடீரென பெய்யும் மழையால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். இதனால் பக்தர்கள் வசதிக்காக திருப்பதியை போல சபரிமலையில் வரிசை வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழியில் சரங்குத்தி மற்றும் மரக்கூட்டம் பகுதிக்கிடையே 6 இடங்களில் இந்த வரிசை வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இங்கு பக்தர்கள் ஓய்வு எடுக்க தனித்தனி அறைகளும், கழிப்பறை, சிற்றுண்டி வசதியும் செய்யப்பட்டுள்ளது. தரிசன நேரம் தெரிவதற்காக டிஜிட்டல் போர்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வசதி தங்களுக்கு பெரும் உதவியாக இருப்பதாக பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.