திருமலை : திருப்பதி கோவிந்தராஜர் கோயில் 3ம் நாள் பிரமோற்சவத்தில் சிம்ம வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், மாலை ஊஞ்சல்சேவை நடைபெற்றது. திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் இரவு பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேத கோவிந்தராஜா சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 2ம் நாளான நேற்று முன்தினம் காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அன்ன வாகனத்தில் கோவிந்தராஜா சுவாமி எழுந்தருளி 4 மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரமோற்சவத்தின் 3ம் நாளான நேற்று காலை கோவிந்தராஜ சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். யானைகள் வீதியுலாவில் முன்னாள் அணிவகுத்து செல்ல பக்தர்களின் கோவிந்த கோவிந்த என்ற பக்தி கோஷங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க இந்து தர்ம பிரச்சார பரிஷத், சாதசாகித்தியா திட்டத்தின் சார்பில் நடனமாடி வந்தனர்.
வழிநெடுகிலும் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை வழிபட்டனர். பின்னர், காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை தேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி உற்சவர்களுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை ஊஞ்சல்சேவை நடைபெற்றது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை முத்துபந்தல் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கண்காணிப்பாளர் மோகனராவ், கோயில் ஆய்வாளர் தனஞ்செயுலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.