திருப்பதி : திருப்பதியில் உள்ள பெண்கள் காப்பகம், அங்கன்வாடி மையங்களில் ஆந்திர மாநில குழந்தைகள் உரிமை ஆணைய தலைவர் கேசாலி அப்பாராவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆந்திர மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் கேசாலி அப்பாராவ் திருப்பதி சரோஜினி தேவி சாலையில் உள்ள பெண்கள் கண்காணிப்பகம், அங்கன்வாடி மையங்கள் மற்றும் நகரத்தில் உள்ள அரசுப்பள்ளியில் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டம் ஆகியவற்றை நேற்று ஆய்வு செய்தார்.
அதன் பின் அவர் பேசுகையில், ‘ஆந்திரமாநில அரசு 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி, மருத்துவ வசதிகளுடன் ஏராளமான நிதியுதவி அளித்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அடிக்கடி மருத்துவ பரிசோதனை நடத்துவதுடன், தொழிற்கல்வி பாடப்பிரிவுகளையும் மேற்கொள்ள வேண்டும் ’என்றார்.மேலும் பெண்கள் ஒழுக்கம், விழுமியங்களை படிக்க வேண்டும் என பரிந்துரைத்தார்.சிசிடிவி கேமராக்கள், பதிவுகள் மேலாண்மை குறித்து ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மாணவர்களின் உணவில் தரம் குறித்தும், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு சத்துணவு பெட்டகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை திட்ட அலுவலர் நவோமி, மைய கண்காணிப்பு அலுவலர் ஜெயஸ்ரீ, பிரகதி தொண்டு நிறுவன இயக்குனர் ரமணா, மிஷன் வாத்சல்யா பணியாளர்கள் தேவயானி, கல்பனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.