திருமங்கலம்: திருமங்கலம் நகாில் பொதுமக்களிடம் பெறப்படும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரங்களை தயாரித்து அவற்றை விவசாயிகளுக்கு நகராட்சி இலவசமாக விநியோகம் செய்து வருகிறது. திருமங்கலம் நகராட்சியில் தினசரி 12 மெட்ரிக் டன் குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிப்பட்டு தெற்கு தெரு, உசிலம்பட்டி ரோடு, விருதுநகர் ரோட்டிலுள்ள மூன்று நுண்உர கூட மையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இந்த குப்பை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என இரண்டாக பிரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பைகள் நுண் உர கூட மையத்தில் அரைக்கும் இயந்திரங்கள் மூலமாக சிறுசிறு துண்டுகளாக அரைக்கப்படுகின்றன.
பின்னர் இவை இந்த மையத்தில் உள்ள தொட்டிகளில் இ.எம் சொலுஷன் மூலமாக 21 நாள்கள் மக்க வைக்கப்படுகின்றன. பின்னர் தொட்டியை விட்டு வெளியே எடுத்து மீண்டும் 24 நாள்கள் உலர வைத்து அவை இயற்கை உரமாக மாற்றப்படுகின்றன. இந்த இயற்கை உரங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் செடி, கொடிகளுக்கும் மற்றும் விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. இயற்கை உரம் தேவைப்படுவோர் நகராட்சி சுகாதாரத்துறையை அணுகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி மூலமாக கிடைக்கும் இயற்கை உரங்களை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
இதுதவிர மக்காத குப்பைகளில் உலர் கழிவுகளான அட்டை, பால்பாக்கெட், பிளாஸ்டிக் கவர்கள் போன்றவற்றை தூய்மை பணியாளர்கள் தாங்களே எடுத்து சென்று விடுகின்றனர். மீதமுள்ள ரப்பர், டயர், பழைய காலணிகள் போன்ற குப்பைகள் அரியலூர் சிமென்ட் ஆலைக்கு திருமங்கலம் நகராட்சி மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.