Tuesday, June 4, 2024
Home » திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 211 கிலோ நகைகள் தங்க கட்டிகளாக மாற்றி ஒப்படைப்பு..!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 211 கிலோ நகைகள் தங்க கட்டிகளாக மாற்றி ஒப்படைப்பு..!!

by Kalaivani Saravanan

சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 211 கிலோ எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களை உருக்கி சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றி தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளரிடம் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு ஆகியோர் ஒப்படைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில் திருக்கோயிலுக்கு பயன்படாத பொன் இனங்களை உருக்கி, சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றி தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் 211 கிலோ எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களை உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வு) செல்வி ஆர். மாலா அவர்கள் முன்னிலையில் இன்று மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் கோவிந்த் நாராயண் கோயலிடம் ஒப்படைத்தனர்.

2021-2022ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், ”கடந்த பத்து ஆண்டுகளாக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், திருக்கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வட்டி மூலமாக திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இப்பணிகளைக் கண்காணிப்பதற்கு மூன்று மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வு பெற்ற மாண்பமை நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, திருக்கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்கள் பிரித்தெடுத்து உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றி முதலீடு செய்திடும் வகையில் சென்னை, திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் திரு.துரைசாமி ராஜு மற்றும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர்கள் திரு.க.ரவிச்சந்திர பாபு, செல்வி ஆர். மாலா ஆகியோர் தலைமையில் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இப்பணிகளை கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம், இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் மற்றும் மாங்காடு, அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு பக்தர்களால் உண்டியலிலும், காணிக்கையாகவும் செலுத்தப்பட்ட பலமாற்றுப் பொன் இனங்கள் உருக்கி சுத்த தங்கமாக மாற்றப்பட்டு பாரத ஸ்டேட் வங்கியில் தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டு, இதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டித்தொகை அந்தந்த திருக்கோயில்களின் மேம்பாட்டிற்காக செலவிடப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட பலமாற்று பொன் இனங்களிலிருந்து கற்கள், அழுக்கு, அரக்கு மற்றும் இதர உலோகங்களை நீக்கி, நிகர பொன்னினங்களை கணக்கிடும் பணியானது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் செல்வி ஆர். மாலா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதன்படி திருக்கோயிலுக்கு பயன்படுத்த இயலாத நிலையில் கிடைக்கப்பெற்ற பலமாற்று பொன் இனங்கள் மொத்த எடை 211 கிலோ கிராமினை உருக்கி, சுத்தத் தங்கமாக மாற்றி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் இன்று மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆகியோர் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் கோவிந்த் நாராயண் கோயலிடம் வழங்கினர்.

இவை மும்பையில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி சுத்தத் தங்க கட்டிகளாக பெற்று அதனை பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும். அதன் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., ஆணையர் திரு.க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் திரு.அருள் முருகன், இணை ஆணையர்கள் திரு. ஆர். செந்தில் வேலவன், திரு.எம்.கார்த்திக், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

4 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi