பெரம்பூர்: துரைப்பாக்கம் நேரு நகரை சேர்ந்தவர் வினோத் (38). இவர், அடையாறு போக்குவரத்து பணிமனையில் பெசன்ட் நகர் பகுதியில் இருந்து பெரம்பூர் வரை செல்லும் (தடம் எண்.29சி) என்ற பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெசன்ட் நகர் பகுதியில் இருந்து பெரம்பூருக்கு வந்து, தனது கைப்பையை டிரைவர் உட்காரும் சீட்டுக்கு அடியில் வைத்துவிட்டு டீ குடிப்பதற்காக சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில், திரும்பி வந்து பார்த்தபோது அந்த பையை காணவில்லை. அதில் ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள பேருந்து டிக்கெட்டுகள் மற்றும் ரூ.600, ஏடிஎம் கார்டு உள்ளிட்டவை இருந்தன. இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வினோத் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.