திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள குருவாயூரப்பன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி கொச்சி விமான நிலையத்துக்கு நேற்று இரவு சென்றார். அவரை கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிஃப் முகமத் கான் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவிலில் அதிகாலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 7.35 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் குருவாயூர் வந்தடைந்த மோடி, ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் தரையிறங்கினார், அங்கு நூற்றுக்கணக்கான பாஜக ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் அவரை வரவேற்க பல மணி நேரம் திரண்டிருந்தனர்.
இந்நிலையில் குருவாயூரப்பன் கோயிலில் பாரம்பரிய உடையான ‘முண்டு’மற்றும் வெள்ளை சால்வை அணிந்து கோவிலில் பிரதமர் பிரார்த்தனை செய்தார்.அவருக்கு கோயில் நிர்வாகம் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கொச்சியின் வில்லிங்டன் தீவில்,கட்டப்பட்ட கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் சர்வதேச கப்பல் பழுதுபார்க்கும் மையம் மற்றும் புதிய உலர் கப்பல்துறையை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.