பூந்தமல்லி: கஞ்சா புகைக்க தயார் செய்யும் வாலிபர் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். ஆந்திராவில் இருந்து சென்னையின் முக்கிய நுழைவாயிலான பூந்தமல்லி வழியாக கஞ்சா கடத்தி வரப்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தனியார் கல்லூரிகள் இருப்பதால் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை இங்கு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார், வாகன சோதனை, தீவிர ரோந்து என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கஞ்சா விற்பனையை தடுப்பது கடும் சவாலாக உள்ளது.
இந்நிலையில், பூந்தமல்லியில் உள்ள ஒரு விடுதியில் இளைஞர் ஒருவர் கஞ்சா புகைக்க அதனை தயார் செய்வது போன்ற காட்சிகளை சக வாலிபர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காவல்துறைக்கு வீடியோவாக இணைத்து அனுப்பி உள்ளார். மேலும் அந்த விடியோவில், பூந்தமல்லியில் உள்ள ஆண்கள் விடுதியில் எடுத்ததாக அதை பதிவிட்டவர் தெரிவித்துள்ளார். தற்போது அந்த பதிவு வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது, அந்த வீடியோவை பதிவு செய்த நபர் யார்?, எந்த விடுதியில் கஞ்சா புகைக்க தயார் செய்தனர் என்பது குறித்து அந்த வீடியோ அடிப்படையில் பூந்தமல்லி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.