பொன்னேரி: மூன்று தலைமுறைகள் கண்டு 100 வயதை கடந்த முதியவருக்கு 46 பேரன், பேத்திகளுடன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த வல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்டீபன். இவர், 5-7-1923 அன்று தனது பெற்றோருக்கு 12வது குழந்தையாக பிறந்தார். இவரது இயற்பெயர் ரத்தினசாமி. இவர் 10 அக்காக்கள் ஒரு அண்ணன் என மிகவும் செல்லமாக வளர்ந்தவர். இளம் வயதிலேயே குத்துச்சண்டையில் ஆர்வம் கொண்டு பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். பின்பு, சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள அசோக் லேலண்ட் தனியார் நிறுவனத்தில் பணியாளராக சேர்ந்தார். கிறிஸ்தவ மதத்தை தழுவியவர் தனது பெயரை ஸ்டீபன் என மாற்றிக் கொண்டு பெத்தானியா திருச்சபைக்கு மூப்பரானார்.
இவர், தனது 25வது வயதில் சாராள் என்பவரை திருமணம் செய்து 6 பெண்கள், இரண்டு ஆண்கள் என 8 பேரை ஈன்றெடுத்தார். இன்று பேரன் பேத்திகள்,கொள்ளு பேரன் பேத்திகள் என 46 பேர்களைக் கொண்டு மூன்று தலைமுறையை கண்டுள்ளார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் நூறு வயதை கடந்த ஸ்டீபனுக்கு மகன்கள், மகள்கள், பேரன் பேத்திகள் என அனைவரும் சேர்ந்து 100வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்தினர். முதியவர் ஸ்டீபனுடன் பிறந்த 11 சகோதர, சகோதரிகளின் உறவினர்களும், வல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் என அவரது வீடு திருவிழா கோலம் பூண்டது. கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து மூன்று தலைமுறையை கண்டு அன்பும் அரவணைப்பையும் கொண்டு நூற்றாண்டு கண்ட முதியவர் ஸ்டீபனிடம் அனைவரும் காலில் விழந்து ஆசி பெற்று சென்றனர்.
முதியவர் ஸ்டீபன் இச் சமூகத்திற்கு சொல்லும் பாடமாக தீய பழக்கங்கள் இல்லாமலும், முறையான உடற்பயிற்சி, சரிவிகித உணவு முறை, தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்வதன் பயனாக, 100 வயதிலும் கணீர் குரலில் அனைவரையும் ஆசீர்வாதம் செய்த நிகழ்வு இன்றைய கால தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.