இந்தியாவின் ஜனநாயகத்திருவிழா என்று கொண்டாடப்படும் 18வது நாடாளுமன்றத் தேர்தல் தற்போது தமிழகத்தில் முதற்கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இதில் அதிகபட்சமாக தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் 81.48 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் 79.25சதவீதம், பெரம்பலூரில் 77.37சதவீதம், சிதம்பரத்தில் 75.32சதவீதம் என்ற அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் மிகவும் குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91சதவீதம் வாக்குகளும், தென்சென்னையில் 54.27சதவீதம் வாக்குகளும், வடசென்னையில் 60.13 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது.
அதேபோல் தேர்தல் ஆணையத்தின் சார்பில் முதலில் வெளியிடப்பட்ட வாக்கு சதவீதத்திற்கும், பின்னர் திருத்தி வெளியிடப்பட்ட வாக்கு சதவீதத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. முதலில் தமிழகத்தின் 39 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளின் சராசரியானது 72.09 சதவீதம் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் 3சதவீதம் வாக்குகள் குறைந்து, மொத்த வாக்குகளின் சராசரி 69.41சதவீதம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை தமிழகத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 69.46சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குகளின் சராசரி 72.49சதவீதம். நடப்பு தேர்தலோடு ஒப்பிடுகையில் இது 3.01சதவீதம் குறைந்துள்ளது.
அதிலும் குறிப்பாக தலைநகரமான சென்னையில் 2நாடாளுமன்றத் தொகுதிகளில் 53.91சதவீதம், 54.27சதவீதம் என்ற ரீதியில் வாக்குகள் பதிவாகி இருப்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. 100 சதவீதம் வாக்கு என்பதே இலக்கு என்ற ரீதியில் தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெடுப்புகளை ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கி விட்டது. பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் இதற்கு பக்க துணையாகவும் நின்றது. ஆனாலும் சராசரியாக 70சதவீத வாக்குகளை கூட எட்ட முடியவில்லை.
கொளுத்தும் வெயிலால் மக்கள் வாக்களிக்க வரவில்லை. உள்ளூர் தொழிலாளர்கள் வெளியூர்களுக்கு சென்றதால் முறையாக வாக்குகள் பதிவாகவில்லை. நகரங்களில் வாக்கு இருந்த நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் வாக்களிக்க வரவில்லை என்று பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இவை அனைத்தும் ஒரு புறம் இருந்தாலும் வாக்கு மையத்திற்கு வந்து பட்டியலில் பெயர் இல்லை என்று ஏராளமானோர் திரும்பிச்சென்றனர். பெரும்பாலான பகுதிகளில் இது ஒரு பூதாகரமான பிரச்னையாகவும் வெடித்தது.
தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.18 கோடி. முந்தைய இறுதி வாக்காளர் பட்டியலோடு ஒப்பிடுகையில் தற்போது 7 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர் என்ற தகவல், தேர்தல் தேதி அறிவித்த நாளில் வெளியிடப்பட்டது. ஆனால் ஏற்கனவே பட்டியலில் இருந்தவர்களின் விபரங்கள் முறையாக சரிபார்க்கப்பட்டதா? வீடு வீடாகச் சென்று வாக்காளர் குறித்து முறையாக ஆய்வு செய்யப்பட்டதா? வாக்கு மைய அளவிலான அலுவலர்கள் இது குறித்து தெளிவான தகவல்களை சமர்ப்பித்தார்களா?
அப்படி என்றால் ஆயிரக்கணக்கானோர் வாக்களிக்க மையத்திற்கு வந்தும் வாய்ப்பு இல்லாமல் திரும்பிச்சென்றது ஏன்? என்பது நடுநிலையாளர்களின் கேள்வியாக உள்ளது. எனவே இனிவரும் காலங்களில் விழிப்புணர்வு என்பதை விட, வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள குறைகளை முறையாகவும், முழுமையாகவும் ஆய்வு செய்வது மிகவும் அவசியம். இது மக்களின் வாக்குரிமையை காப்பதோடு வாக்கு சதவீதம் அதிகரிக்கவும் நிச்சயம் வழிவகுக்கும் என்பது நிதர்சனம்.