தூத்துக்குடி: பெருமழை, வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் அங்குள்ள கலைஞர் அரங்கத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு தேவையான உதவிகளை திமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். கனமழை கொட்டித் தீர்த்த தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீட்பு பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள முத்தம்மாள் காலனி, ரஹமத் நகர், பாரதி நகர், எஸ்.பி.ஐ. காலனி உள்ளிட்ட பகுதிகள் கனமழை காரணமாக கடும் பாதிப்புக்குளாகியுள்ளது.
வெள்ளத்தில் தத்தளித்த சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டு கலைஞர் அரங்கில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்டவைகளை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் செய்து வருகின்றனர். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு முகாமாக, தூத்துக்குடி மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கம் மாறியிருப்பது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. வெள்ளம் வடிந்து மீண்டும் இயல்பு நிலை திரும்பும் வரை கலைஞர் அரங்கிலேயே அங்கேயே தங்கி இருக்கப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.