நெல்லை: தூத்துக்குடி, நெல்லை நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி பல்லடம் அருகே மாதப்பூரில் நடைபெற்ற தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இன்று தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். பாம்பனில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில்வே தூக்குப் பாலத்தை பிரதமர் திறந்துவைக்கிறார்.
அதனை தொடர்ந்து நெல்லையில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். தூத்துக்குடி, நெல்லை நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர்; பல்லடத்திலும் மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன். மகாராஷ்டிராவின் யவத்மாலுக்குச் புறப்படுவதற்கு முன் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இன்றைய நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் இவ்வாறு கூறினார்.