Thursday, May 16, 2024
Home » தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பு உப்பாற்று ஓடைக்கரைகள் பலப்படுத்த நடவடிக்கை

தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பு உப்பாற்று ஓடைக்கரைகள் பலப்படுத்த நடவடிக்கை

by Lakshmipathi

*தமாகா வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலனை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரசாரம்

ஸ்பிக்நகர் : தூத்துக்குடி, முத்தையாபுரத்தில் தமாகா வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் மேற்கொண்டார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமாகா வேட்பாளராக எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று முத்தையாபுரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டமானது தொழிலாளர்கள் அதிகமாக நிறைந்த பகுதியாகும். தொழிலாளர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கக் கூடிய கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி செயல்படுகிறது.

இந்தப் பகுதியை பொறுத்தளவில் பெருமழையின் போது உப்பாற்று ஓடை கரைகள் உடைபட்டு மிகப்பெரிய இழப்புகள் ஏற்படுகிறது. உப்பாற்று ஓடையின் இரு பக்கமும் உயரமாகவும், அகலமாகவும் கரைகள் அமைக்கப்பட்டு கனரக வாகனங்கள் செல்லக்கூடிய வகையிலான ஏற்பாடுகளை நம்முடைய வேட்பாளர் எஸ்டிஆர்.விஜயசீலன் உறுதியோடு செய்வார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்வாரியம் மற்றும் துறைமுக வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை, எளிய மாணவர்கள் படிக்கக் கூடிய நவோதயா பள்ளி அமைக்கப்படும். மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு நிரந்தர பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒன்றிய அரசோடு ஒத்துப் போகக்கூடிய வகையில் இருக்கக்கூடிய வேட்பாளராகிய எஸ்டிஆர் விஜயசீலனுக்கு சைக்கிள் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள், என்றார்.
தொடர்ந்து தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் ஜி.கே.வாசன் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் 3வது முறையாக பாரத பிரதமராக பதவியேற்பார். இந்த பகுதியை வளமான பகுதியாக மாற்ற வேண்டும். இந்தியா மேலும் வளர்ச்சி பெற வேண்டும்.

இதற்கு 3வது முறையாக மோடி பிரதமர் ஆக வேண்டும். எனவே வரும் மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் உங்களில் ஒருவராக இருக்க கூடியவர், இந்த பகுதியில் வசிக்கக் கூடியவர், 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு பிரச்னை என்றால் ஒரு மணி நேரத்தில் அங்கு வந்து நிற்கக் கூடிய எஸ்.டி.ஆர்.விஜயசீலனுக்கு சைக்கிள் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு பேசினார்.

பிரசாரத்தில் தெற்கு மாவட்ட பாஜ தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச்செயலாளர் உமரிசத்யசீலன், மாவட்ட துணை தலைவர்கள் வாரியர், சுவைதர், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், ஓபிசி பிரிவு மாநில துணை தலைவர் விவேகம் ரமேஷ், பொருளாதார பிரிவு மாநில செயலாளர் பிரபு, மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் சின்னத்தம்பி, மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் ரவிச்சந்திரன், சட்டமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் இசக்கிமுத்து, மண்டல தலைவர்கள் மாதவன், சிவராமன், சிவகணேசன், சக்திகேந்ரா பொறுப்பாளர்கள் லட்சுமணன், சங்கர், செல்வி, இளைஞரணி சக்திவேல், வர்த்தக அணி பரமசிவம், விளையாட்டு பிரிவு பிரபாகர், பொருளாளர் பாலகுமார், மண்டல துணை தலைவர் பொன்செல்வன், அமமுக சார்பில் மதன்குமார், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

5 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi