திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் இன்று காலை சுவாமி மீது சூரியக் கதிர்கள் படர்ந்தன. இதையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற வைத்தியநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 1, 2, 3ம் தேதிகளில் அதிகாலை சூரியக் கதிர்கள், மூலவரான சிவலிங்கத்தின் மீது படும்.
இந்த ஆண்டு பங்குனி பிறக்க இன்னும் சில தினங்கள் இருக்கும் நிலையில், இன்று காலை கோயிலில் உள்ள வைத்தியநாத சுவாமி, சிவகாமி அம்பாள் மீது சூரியக் கதிர் படர்ந்தது. இதை தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முத்து மணிகண்டன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.