Sunday, May 5, 2024
Home » திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை

திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை

by Suresh

திருவேங்கடம்: தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குடும்ப பிரச்னையில் மனைவியை உலக்கையால் அடித்து கொலை செய்த கணவர், போலீஸ் விசாரணைக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டம் கீழதிருவேங்கடம் அருகே தெற்கு பாறைப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(65) கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி சீதை(65). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள். இவர்களில் 2 மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர். மற்றொரு மகனுக்கு திருமணம் ஆகவில்லை. அவரும் சென்னையில் வசித்து வருகிறார். இதனால் கருப்பசாமி மற்றும் அவரது மனைவி சீதை ஆகியோர் சொந்த ஊரில் வசித்து வந்தனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு வழக்கம்போல் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி, வீட்டில் கிடந்த உலக்கையால் மனைவி சீதையின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் பலியானார். மனைவியை அடித்துக் கொலை செய்த குற்ற உணர்வு மற்றும் போலீஸ் விசாரணைக்கு அஞ்சிய கருப்பசாமி, விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிமருந்தை குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடினார். இன்று காலை அருகில் இருந்த வீட்டினர் பார்த்தபோது சீதை ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். கருப்பசாமி, விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர், திருவேங்கடம் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று உயிருக்கு போராடிய நிலையில் கருப்பசாமியை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி கருப்பசாமி உயிரிழந்தார். இதுபோல் கொலையான சீதை உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து திருவேங்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். குடும்ப பிரச்னையில் மனைவியை கணவர் அடித்து கொலை செய்துவிட்டு கணவரும் தற்ெகாலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

7 + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi