சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி திருவான்மியூர் கடற்கரையில் பாரா செய்லின் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் பாரா செய்லின் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விழிப்புணர்வு பலூன்களும் பறக்க விடப்பட்டன.பின்னர் நிருபர்களுக்கு ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: தேர்தல் ஆணையத்தின் வலியுறுத்தல்படி 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மக்களை ஈர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கடற்கரை அருகில் பறக்கும் பலூன் மூலம் விழிபுணர்வு ஏற்படுத்தப்பட்டது. 1,175 தபால் வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளது. முதியோர் மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு 13ம் தேதி (இன்று) வரை நடக்கும். சின்னங்கள் பொருத்தும் பணி நல்லமுறையில் விரைவாக நடந்து வருகிறது. இந்த பணி விரைவில் நிறைவு பெறும். 35 வாக்குச்சாவடிகளில் 40 சதவீதம் வாக்கு பதிவாகிறது, அதனை கருத்தில் கொண்டு பணிகள் செய்கிறோம். ராணுவத்தினர் பணியிட மாறுதலில் வருவோருக்கும் வாக்களிக்க அதற்கான ஏற்பாடு செய்கிறோம். 228 குடிசைப்பகுதிகளில் வாக்குப்பதிவை அதிகரிக்கவும் அவர்கள் இடம் மாறுதலில் சென்றால் அதனை கருத்தில் கொண்டு பணிகள் மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.