திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மோவூர் கிராமத்தில் ஸ்ரீ துரையாத்தம்மன் ஆலயம் உள்ளது. கேட்டவருக்கு கேட்ட வரம் அளிக்கும் துரையாத்தம்மனுக்கு ஆடி மாத 3ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக கடந்த 2ம் தேதி காலையில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சியும் 4ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து காலை, மாலை வேளைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடத்தப்பட்டது.
முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட விரதம் இருந்த பக்தர்கள், தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தீமிதி விழாவில் மோவூர், பூண்டி, நெய்வேலி உள்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் அம்மனை தரிசித்து சென்றனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.