திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளங்காடு, இடும்பாவனம் கிராமத்தில் தொடர் மழையால் 500 ஏக்கர் பரப்பளவிலான சம்பா பயிர் நீரில் மூழ்கி இருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. மேட்டூர் அணையில் நீர் இல்லாததால் நேரடி விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டு சம்பா பயிர்களை சாகுபடி செய்து வந்தனர். தற்போது மழை பெய்து வருவதால் விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.
ஆனால் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருவதால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. அருகில் உள்ள வாய்க்கால்களில் ஆகாய தாமரை மண்டியிருப்பதாலும், சரிவர பராமரிக்காமல் உள்ளதாலும், வடிகால்கள் சரியாக வெட்டாமல் இருப்பதால் தண்ணீர் வடிவதற்கு சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விளாங்காடு, இரும்பாவனம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உள்ள சம்பா நெற்பயிர் சாகுபடி தண்ணீரில் முழங்கியுள்ளது.
இதனால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.