திருத்தணி: திருத்தணி நகராட்சியில் புதர் மண்டிக்கிடக்கும் நல்லதண்ணீர் குளம் சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருத்தணி நகராட்சி காந்திநகர் பகுதியில் உள்ளது நல்லதண்ணீர் குளம். இங்கு, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், தமிழ்நாடு சுற்றுலா மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் சார்பில், ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. மேலும், பூங்கா மற்றும் நடைபயிற்சி மேடை ஆகியவை உருவாக்கி மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இந்த பூங்காவிற்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று விளையாடுவது, ஓய்வு எடுப்பது, நடைபயிற்சி மேற்கொள்ளுதல் போன்றவையில் திருத்தணி பகுதி மக்கள் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் முதியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் இங்கு நடை பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த பூங்காவில் உள்ள பகுதியில் சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், நடைபயிற்சி செல்லும் பகுதியில் அதிகளவில் குப்பைகள் மற்றும் மரத்தின் இலைகள் விழுந்துள்ளதால் நடந்து செல்பவர்கள் தவறி விழுந்து செல்கின்றனர். நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக காந்திநகர் நல்லதண்ணீர் குளத்தை நேரில் வந்து பார்வையிட வேண்டும். பூங்காவில் உள்ள குப்பைகள் அகற்றி, சீரமைத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்த்து கோரிக்கை வைத்துள்ளனர்.