ஆவடி: ஆவடி அடுத்து திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் பண பெட்டியில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் பணம் திருடப்பட்டது. ஆவடி அடுத்து திருநின்றவூர் தனியார் பள்ளி உரிமையாளர் வினோத்(37). இவர், நேற்றுமுன்தினம் இரவு பள்ளியில் உள்ள அவரது அறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும், நேற்று காலை சுமார் 8.45 மணி அளவில் வந்து கதவைத் திறந்து பார்த்தபோது, ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டிருந்தது.
இதில், உள்ளே வந்த மர்ம நபர்கள் அறைக்குள் வைத்திருந்த பணப்பெட்டியை உடைத்து, அதில் இருந்த ரூ.1.50 லட்சம் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில், திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பள்ளியின் பின் பக்கம் மூலம் வந்து பணத்தை எடுத்து சென்றது தெரிய வந்துள்ளது. எனவே, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.