திருப்பூர்: திருப்பூரில் தியாகி திருப்பூர் குமரன் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு திருநீறு பட்டை போட்டு பரப்புரையை தொடங்கிய பாஜகவினர். தியாகி கொடிகாத்த குமரன் சிலை திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. இன்று பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பாக குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாலை அணிவிக்க சென்ற வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் பாஜகவினர் குமரன் சிலைக்கு திருநீறு பட்டை போட்டு பின்னர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தியாகி கொடிகாத்த குமரன் சிலைக்கு பட்டை போட்டு மத அடையாளத்தை உருவாக்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது.