ஹாசன்: விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கர்நாடக மாநிலம் ஹாசனில் ரூ.3 லட்சம் மதிப்பிலான தக்காளியை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கடந்த சில தினங்களாக தக்காளி விலை கிடு கிடு விலையேற்றம் கண்டு வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள், மாதுளை பழங்களுடன் போட்டி போடும் அளவுக்கு தக்காளியின் விலையும் உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலையை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகா கோணி சோமனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பர்வதம்மா.
சந்தையில் தற்போது தக்காளிக்கு நல்ல விலை கிடைத்து வருவதால், தனது 2 ஏக்கர் மதிப்பில் உள்ள பண்ணை தோட்டத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு இவரின் பண்ணை தோட்டத்தில் புகுந்த மர்மநபர்கள் சிலர், 50 கிலோ எடை கொண்ட 60 பெட்டி தக்காளியை செடியில் இருந்து பறித்து சென்று விட்டனர். மறுநாள் காலையில் பர்வதம்மா வந்து பார்த்த போது, தக்காளி செடிகள் சேதமடைந்தும், அதில் உள்ள தக்காளிகள் மாயமானதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, பர்வதம்மா, ஹளேபீடு போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து பர்வதம்மா கூறும் போது, ‘விலை உயர்வை மனதில் வைத்து 2 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தேன். நல்ல விளைச்சல் வந்த நிலையில் 2 நாளில் தக்காளியை பறிக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் மர்மநபர்கள் சிலர் தக்காளியை திருடி சென்றுவிட்டனர். தக்காளியை பறித்தது மட்டுமல்லாது செடியையும் முறித்து வீணாக்கி உள்ளதாகவும் மீதி இருக்கும் செடிகளில் தக்காளி இனி வராது எனவும் கண்ணீருடன் தெரிவித்தார். திருடு போன தக்காளியின் மதிப்பு ரூ.3 லட்சமாகும். இதற்கிடையே, ஹாவேரியில், உள்ள கடையில் வியாபாரி ஒருவர் தக்காளி திருட்டை தடுப்பதற்காக அப்பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தி நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.