மும்பை: இன்றைய அரசியலில் கொள்கை எதுவும் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். பாஜக மூத்த தலைவரும் ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரி, தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘இன்றைய அரசியலில் கொள்கை எதுவும் இல்லை. யார் எப்போது எந்த கட்சிக்கு செல்வார் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. சித்தாந்த அரசியலை கடைபிடித்து வாழ்நாள் முழுவதும் அதற்காக செலவிடுவது அரிதாகி வருகிறது. இப்போது இருக்கும் எதிர்க்கட்சிகளுடன் எவ்வித பேச்சு வார்த்தையும் இல்லை. அவர்களின் நடத்தையும் ஏற்புடையதாக இல்லை.
இதேநிலை தொடருமானால் ஜனநாயக அமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விடும். யார் வலதுசாரி, யார் இடதுசாரி என்று தெரியாத அளவுக்கு தற்போது கட்சிகளின் செயல்பாடுகள் மாறி வருகின்றன. அனைத்து துறைகளிலும் தரம் குறைந்து வருவது போல் அரசியலும் தரம் குறைந்து வருகிறது. முந்தைய அரசியல் தலைவர்களிடம் இருந்தது போல, இப்போது இருக்கும் அரசியல் தலைவர்களிடம் கொள்கை இல்லை. அனைவரும் சந்தர்ப்பவாதிகளாக உள்ளனர். எதிர்க்கட்சிகள் தங்கள் வரம்புகளை புரிந்து கொள்ள வேண்டும். நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை அவர்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும்’ என்று கூறினார்.