தேனி: தேனி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்தை இணைக்கும் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய 3 மலைப்பாதைகளில் மண்சரிவுஏற்பட்டுள்ளது. மண்சரிவால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்குமான போக்குவரத்து துண்டிக்கபட்டுள்ளது. இதனால் சபரிமலை செல்லும், சபரிமலையில் இருந்து திரும்பும் ஐயப்ப பக்தர்கள் அவதியடைந்துள்ளனர்.
வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழ்நாட்டை கடந்த 24 மணிநேரமாக பெருமழை புரட்டி எடுத்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஒரு ஆண்டு முழுவதும் பெய்திருக்க வேண்டிய மழை ஒரே நாளில் அதிகபட்சமாக 95 செ.மீ அளவு கொட்டித் தீர்த்தது. இந்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கன அடிநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதே போல விருதுநகர், தேனி, சிவகங்கை மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. இந்த மழையால் தேனி மாவட்டத்தை கேரளாவுடன் இணைக்கக் கூடிய மலைப் பாதைகளான குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய 3 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு – கேரளா இடையேயான முதன்மையான தென்மாவட்ட சாலை துண்டிக்கப்பட்டிருக்கிறது. தற்போது நிலச்சரிவை அகற்றும் பணிகள் தீவிரபடுத்தபட்டுள்ளது.