சோழிங்கநல்லூர்: சென்னை அடுத்த மாம்பாக்கத்தை சேர்ந்தவர் வசந்தி (53). இவர், விற்பனை வரி துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மாமனார் பிரபாகரன், வேளச்சேரி காந்தி சாலை பகுதியில் வசித்து வருகிறார். நேற்று வசந்தி தனது மாமனாரிடம் வீடு கட்டுவதற்காக, கடனாக ரூ.5 லட்சம் பெற்றுள்ளார். பின்னர், அதை பையில் வைத்துக்கொண்டு மாநகர பேருந்தில் வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிறுத்தம் வந்துள்ளார். அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, அவர் பையில் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.