தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் சார்பில் சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ் மீனவர்களை சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசு மீனவர் நலன்களை காப்பாற்ற பாடுபடுவதாக பேசிய அமைச்சர் எல்.முருகன், மீனவர்கள் தங்கள் குறைகள் குறித்து அமைச்சரிடம் தெரிவிக்கலாம் என்றார்.
இதையடுத்து, மீனவர் ராஜேந்திரன் என்பவர், படகுகளை பாதுகாக்க மணிமுத்து ஆற்றுப்பகுதியை ஆழப்படுத்தி தடுப்புச்சுவர் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் இந்த கோரிக்கையை முழுமையாக காது கொடுத்து கேட்காமல், அவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா கூட்டத்தில் இருந்து எழுந்து சென்றார். இதன்படி தொடங்கிய சிறிது நேரத்திலேயே மீனவர் சந்திப்பு கூட்டம் முடிவுக்கு வந்ததால், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்ட மீனவர் கிராமங்கள்
நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களிடம் ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் குறைகள் கேட்டறிந்தனர். அப்போது மீனவர்கள் பல்ேவறு கோரிக்கைகளை விடுத்தனர். இதை தொடர்ந்து அமைச்சர் பர்ஷோத்தம்ரூபாலா பேசுகையில், பாரம்பரிய மீன்பிடி கிராமங்கள் வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளீர்கள். இது குறித்து கலந்தாய்வு செய்து விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.