வேலூர்: கோட்டையில் உள்ள அகழியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளால் அசுத்தம் ஏற்பட்டுள்ளது. வேலூர் கோட்டைக்கு தினமும் ஏராளமான உள்ளூர், வெளிநாடு, வெளிமாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் கோட்டை வளாகம் மற்றும் அகழியை பார்வையிட்டு செல்கின்றனர். கோட்டையை சுற்றிலும் 191 அடி அகலமும், 29 அடி ஆழமும் கொண்ட அகழி அமைந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹33 கோடி மதிப்பில் கோட்டையில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் பல்வேறு மேம்பாட்டு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
கோட்டையின் உட்புறம் நடைபாதை, குடிநீர் வசதி, கேன்டீன் வசதி, உணவருந்தும் வசதி, அலங்கார மின்விளக்குகள், ஒளி ஒலி அரங்கம், கோட்டை அகழியை தூர்வாருதல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அகழி தூர்வாருதல், கோட்டைக்குள் சாலைப்பணிகள், விளக்குத்தூண்கள் என ஒரு சில பணிகள் மட்டும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் கோட்டை அகழியின் நுழைவு வாயில் பகுதி அகழியில் பிளாஸ்டிக் குப்பைகளும், கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அகழி தண்ணீர் கழிவுநீராக மாறியது. இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசியது. எனவே தொல்லியல் துறை சார்பில் அகழியில் மிதக்கும் குப்பைகளையும், கழிவு பொருட்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.