Friday, June 20, 2025
Home செய்திகள்Showinpage குவைத் 6 மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 41 இந்தியர்கள் உள்பட 49 பேர் பலி: பாதிக்கப்பட்ட தமிழர்களின் விவரங்களை சேகரித்து உதவஅயலக தமிழர் நலத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

குவைத் 6 மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 41 இந்தியர்கள் உள்பட 49 பேர் பலி: பாதிக்கப்பட்ட தமிழர்களின் விவரங்களை சேகரித்து உதவஅயலக தமிழர் நலத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

by Arun Kumar

துபாய்: குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். இதில் 41 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர். இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது.

இந்த தீ கட்டிடம் முழுவதும் பரவியதில், கட்டிடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீயில் சிக்கி கொண்ட தொழிலாளர்கள் பதற்றத்தில் கட்டிடத்தில் இருந்து வெளியே ஓடி வந்தனர். கட்டிடத்தில் இருந்து தொழிலாளர்கள் பலர் வெளியே ஓடி தப்பிய நிலையில், அறைகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள் உள்ளே சிக்கி கொண்டனர். காப்பாற்றும் படி அவர்கள் சத்தம் போட்டனர். இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில்,49 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் பலியானவர்கள், படுகாயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். சிலர் தப்பிப்பதற்காக முயற்சிக்கும் போது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் கூறுகையில், ‘‘இந்த கட்டிடத்தில் தனியார் கட்டுமான நிறுவன ஊழியர்கள் பலர் தங்கியிருந்தனர். தீயணைப்பு படையினர் உதவியுடன் 10க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக புகையை சுவாசித்ததில் பலர் உயிர் இழந்தனர்’’ என்றனர். உயிரிழந்தவர்களில் 41 இந்தியர்கள்.கேரளாவை சேர்ந்த 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவைத் உள்துறை அமைச்சர் ஷேக் பஹத் அல் யூசுப் அல் சபா தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். அப்போது, கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் காப்பாளர் ஆகியோரை கைது செய்ய போலீசுக்கு உத்தரவிட்டார். இதற்கிடையே தீ விபத்தில் இந்தியர்கள் பலியானதாக வந்த தகவலையடுத்து பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் ஒன்றிய வெளியுறவு இணை அமைச்சர் கே.வி.சிங் அவசரமாக குவைத்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார் என்று வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

தீ விபத்தில் கேரளாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் இறந்துள்ளனர். குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ கோரி ஒன்றிய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியுறவு அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர் என்ற செய்தியை பார்த்தேன். இதில், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

எனவே தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குவைத் அரசுடன் சேர்ந்து இந்திய தூதரகம் உதவி செய்வதற்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். குவைத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் தீ விபத்து காரணமாக, 49 பேர் உயிரிழந்துள்ளனர்.குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அயலகதமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையரகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கேரள உரிமையாளர்: தீ விபத்து நடந்த கட்டிடம் என்பிடிசி குழுமத்துக்கு சொந்தமானது. என்பிடிசி நிறுவனத்தின் அதிபர் கேரளாவை சேர்ந்த கே.ஜி. ஆபிரகாம். என்பிடிசி சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் பலர் கட்டிடத்தில் வசித்து வருகின்றனர். கேரளா,தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த 200 பேர் இதில் வசித்து வந்தனர்.

* பிரதமர் மோடி அதிர்ச்சி

தீ விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிடுகையில், குவைத்தில் நடந்த தீ விபத்து அதிர்ச்சி அளிக்கிறது. இதில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். குவைத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அந்த நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார். குவைத்தில் தீ விபத்து தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டிவிட்டரில் பதிவிடுகையில், குவைத்தில் நடந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் பலியான செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இதில் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். தீ விபத்து நடந்த இடத்துக்கு இந்திய தூதர் சென்றுள்ளார். மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம். தீ விபத்தில் தங்கள் உறவுகளை இழந்த இந்திய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமாக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

* உதவி எண் அறிவிப்பு

குவைத் தீ விபத்து தொடர்பாக தகவல்களை கேட்டு பெற உதவ அவசர உதவி எண்ணை குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டோர் 965-65505246 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் டிவிட்டரில் பதிவிடுகையில், குவைத்துக்கான இந்திய தூதர் ஆதர்ஷ் சுவைகா தீ விபத்தில் படுகாயமுற்று அல் அட்னன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 30 இந்தியர்களை பார்வையிட்டு அவர்களுடைய உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும், இந்திய தூதரகம் சார்பில் முழு உதவிகள் அளிக்கப்படும் என அவர் உறுதியளித்தார். அல் அட்னன்,பர்வானியா, அல் அமீரி உள்பட சில மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் உடல் நிலை நன்றாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

* தமிழர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கை அயலகத் தமிழர் நலத்துறை எண்களை தொடர்பு கொள்ளலாம்

தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை சென்னையில் நேற்று வெளியிட்ட அறிக்கை: குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, சுமார் 49 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வரப்பெற்றுள்ளது. அவர்களுள் எவரேனும் தமிழர் உள்ளனரா என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தலின் படி அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு இந்தியாவிற்குள் +91 1800 309 3793, வெளிநாடு +91 80 69009900, +91 80 6900 9901 ஆகிய அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi