தென் அமெரிக்காவின் ஈக்வடார் பகுதியை சேர்ந்த பெலா மோன்டோயா (76) என்ற மூதாட்டிக்கு மூளை பக்கவாதம் இருந்ததால், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், மூதாட்டி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மூதாட்டி மருத்துவமனையில் இறந்ததற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. அவரது உடலை சவப்பெட்டியில் வைத்து வீட்டிற்கு எடுத்து வந்தனர். சவப்பெட்டியை வீட்டில் திறந்து பார்த்தபோது, இறந்ததாக கூறப்பட்ட மூதாட்டியின் உடலில் அசைவு ஏற்பட்டது. சவப்பெட்டிக்குள் கிடந்த மூதாட்டியின் கைகள் ஆடின. மூச்சும் விட்டார்.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அந்த மூதாட்டியை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகும் நிலையில், ஈக்வடார் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மூதாட்டிக்கு இருதய சுவாசக் கோளாறு இருந்தது. அதனால் அவரது சுவாசம் தடைபட்டது. அதையறிந்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.