கொடைக்கானல்: விண்வெளியை ஆராய்ச்சி செய்ய இன்சிஸ்ட் என்ற புதிய விண்கலம் விரைவில் அனுப்பப்படும் என கொடைக்கானலில் நடந்த மாநாட்டில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானிகள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் உள்ள 21 நிறுவனங்களில் இருந்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் என 90 பேர் பங்கேற்றனர். இந்த மாநாட்டை நடத்திய விஞ்ஞானிகள் ராவ், ரஞ்சித் மிஸ்ரா, சாந்த பிரத்தா, ஸ்டாலின் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் செயலிழக்கும்போது கருந்துளைகள் ஏற்படுகின்றன. இதுபற்றி விஞ்ஞானி ஐன்ஸ்டீன் தகவல் கூறியிருந்தார். ஆனால் அப்போது நிரூபிக்கப்படவில்லை. தற்போது கருந்துளைகள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. கருந்துளைகளை ஆய்வு செய்ய 2015ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ‘அஸ்ட்ரோ சாட்’ என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது.
இதனுடைய செயல்பாடுகள் 5 ஆண்டுகள் மட்டுமே இருக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் இன்னும் 10 ஆண்டுகள் இந்த விண்கலம் செயல்படும் நிலையில் சிறப்பாக உள்ளது. இந்த விண்கலத்தில் நிறுவப்பட்டுள்ள பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்கள் மூலம் இந்தியா முழுவதும் ஆராய்ச்சி மாணவர்கள் விண்வெளியை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விண்கலம் மூலம் 20 கருந்துளைகள் இருப்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. இவை சூரியனை விட பன்மடங்கு பெரியது. இதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் அபாயகரமானது. ஆனால் பூமிக்கு எந்த ஆபத்தும் இதனால் இல்லை. அஸ்ட்ரோ சாட் விண்கலம் மூலம் ஆய்வு செய்வது பற்றிய மாநாடு கடந்த 2013ம் ஆண்டு துவங்கப்பட்டது. அப்போது மிக குறைவான விஞ்ஞானிகளே பங்கேற்றனர். தற்போது 10 ஆண்டுகள் கழித்து இந்த ஆய்வில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் பங்கெடுத்து வருகின்றனர்.
வரும் காலத்தில் உலகில் சிறந்த விண்வெளி ஆராய்ச்சி நாடாக இந்தியா உருவெடுக்கும். அஸ்ட்ரோ சாட் போல் புதியதாக இன்சிஸ்ட் என்ற விண்கலம் இந்தியாவில் உள்ள பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்பட்டு இஸ்ரோ ஒப்புதலுக்காக தயார் நிலையில் உள்ளது. அஸ்ட்ரோ சாட் விண்கலத்தில் எவ்வளவு துல்லியமான தகவல்களை பெற்று வருகிறோமோ, அதைவிட இன்சிஸ்ட் விண்கலத்தில் கூடுதலான தகவல்களை பெற முடியும். இந்த விண்வெளி ஆய்வுகள் இந்தியாவின் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு கூறினர். பேட்டியின் போது கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் எபினேசர், குமரவேல் ஆகியோர் உடனிருந்தனர்.