நெல்லை: சிவகிரி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா கோடங்கிபட்டியை தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (36). விவசாயியான இவர், கடந்த 2020ம் ஆண்டு 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வாசுதேவநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் செல்லத்துரை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
செல்லத்துரைக்கு உதவியதாக மாரிசெல்வம் (23) என்பவரும் கைது செய்யப்பட்டார். நெல்லையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நீதிபதி அன்புச்செல்வி நேற்று தீர்ப்பளித்தார். செல்லத்துரைக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மாரிசெல்வத்துக்கு அவதூறாக பேசியதற்கு 6 மாதம் சிறை தண்டனையும், மிரட்டல் விடுத்ததற்கு 1 ஆண்டு சிறையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.