சென்னை: தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் 1983ம் ஆண்டு சட்ட விதிமுறைப்படி கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் வருகிற 15ம் தேதி தொடங்குகிறது. இந்த தடை 61 நாட்களுக்கு அமலில் இருக்கும். அதுவரை எந்த விசைபடகுகளும் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாது. இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், தங்கள் மீன் பிடி உபகரணங்களையும் சீரமைப்பார்கள். இந்த தடை காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணம் அரசு சார்பில் வழங்கப்படும்.
மீன் பிடி தடை காலம் தொடங்கிய பின்னர் மார்க்கெட்டுகளில் மீன் வரத்து குறையும். எனவே, மீன்விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 1,200 விசைப்படகுகள் உள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை மீன்பிடி தடை காலத்துக்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வியாபாரிகள், மீன் பிரியர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மீன்விலையும் அதிகரித்து இருந்தது. இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, ‘‘வருகிற 15ம் தேதி முதல் மீன்படி தடைகாலம் அமலுக்கு வருகிறது. இந்த காலத்தில் படகுகளை சீரமைப்போம். என்றனர்.