வாஷிங்டன் : ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு போட்டியாக புதிய எக்ஸ்ஏஐ என்ற நிறுவனத்தை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தொடங்கி உள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பல பாதிப்புகள் ஏற்படும் என எச்சரித்து வந்தவர்களில் ஒருவர் எலான் மஸ்க். சாட்GPT, கூகுளை பார்ட் உள்ளிட்ட பல சாட் போட் வலைதள ஏஐ சேவைகள் அறிமுகமாகி அவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் எலான் மஸ்க், புதிய ஏஐ நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.எக்ஸ்ஏஐ என இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தின் உண்மைகளை தெரிந்து கொள்ள புதிய ஏஐ நிறுவனத்தை தொடங்க உள்ளதாக ஏப்ரல் மாதமே எலான் மஸ்க் கூறியிருந்தார்.
தற்போது தொடங்கப்பட்டுள்ள நிறுவனம் சாட் ஜிபிடிக்கு போட்டியாக புதிய சேவையை உருவாக்கும் பணியில் ஈடுபட உள்ளது. இந்த நிறுவனத்தில் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் முன்னாள் ஊழியர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளது. மேலும் ஏஐ தொழில்நுட்பத்தில் உள்ள ஆபத்துகள் குறித்து ஆய்வு நடத்தி வரும் டென் ஹென்றிக்ஸ் அறிவுரைப்படி, இந்த நிறுவனம் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.