*தங்கச்சிமடத்தில் மத நல்லிணக்கம்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மத நல்லிணக்கத்துடன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ராஜா நகரில் ராஜா சுவாமி கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று காலையில் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இரண்டு நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. காலபூஜைகளை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 10 மணியளவில் ராஜா சுவாமி கோயில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகமும் சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
இதற்கு முன்னதாக கும்பாபிஷேகத்திற்கு அப்பகுதி கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பூஜை பொருட்கள், பழங்கள், குத்துவிளக்கு உள்ளிட்ட உபய பொருட்களை வழங்கி சிறப்பித்தனர். இதில் பக்தர்கள், ஆன்மீகப் பெருமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கோவில் கமிட்டி தலைவர் முத்துமாரி, து.தலைவர் பாலசுப்ரமணியன், பொருளாளர் கருணாநிதி, ஜமாத் தலைவர் சியாமுதீன், கிறிஸ்தவ சமுதாய தலைவர் சம்சன், வணிகர் சங்கம் மற்றும் வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டியன் கலந்து கொண்டார்.