திருவள்ளூர்: கலெக்ட்டர் அலுவலகத்தில் வாலிபர் ஒருவர் நிர்வாண போராட்டம் நடத்தி ரகளையில் ஈடுபட்டார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு ஆண், பெண் நேற்றுமுன்தினம் இரவு வந்தனர். அப்போது, ‘கலெக்டர் வெளியே வர வேண்டும். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்’ என கூச்சலிட்டனர். திடீரென அந்த ஆண், தான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி முழு நிர்வாணமாக நின்றார்.
இதை பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து ஆடைகளை அணிய சொல்லி கட்டாயப்படுத்தினர். பின்னர் ஆடைகளை அணிந்தார். தகவலறிந்து திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விசாரணையில் திருவள்ளூர் அடுத்த புட்லூர் வேளாங்கண்ணி தெருவை சேர்ந்த கார்த்திக் (எ) நீலகண்டன் (33) என்பதும் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்.
இவரை வில்லிவாக்கம் போலீசார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை வழக்கில் தொடர்புடைய தன்னுடைய நண்பர்கள் இருக்கும் இடத்தை சொல்ல சொல்லியும், குற்றவாளிகளை பிடித்து தருமாறும் தொந்தரவு செய்வதாகவும் கூறினார். மேலும், தன்னையும் தனது மனைவியும் தகாத வார்த்தைகளால் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு அலப்பறையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் டவுன் போலீசார் பிரச்சனையை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.